வியாழன், 30 ஜூன், 2011

கண்ணம்மா என் காதலி - 3

முகத்திரை களைதல

லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
  சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி
  கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?

செவ்வாய், 28 ஜூன், 2011

பாரதியார் பாடல்கள்

 கண்ணம்மா என் காதலி


சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
 நக்ஷத் திரங்க ளடீ!

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
 மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
 கன்னத்து முத்த மொன்று!  



ஞாயிறு, 12 ஜூன், 2011

நட்புக்காலம


கவிஞர் அறிவுமதி

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

*******

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ

*******

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்

*******

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

*******

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

*******

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

*******

நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்

*******

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

*******

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

*******

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்

*******

'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு

*******

தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று

*******

கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன

*******

தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது

*******

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று

*******

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

*******

தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது

*******

சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்க‌ச்
சிரிக்க‌ப்
பேசுகிறார்கள்
இவர்கள்

*******

கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்

*******

ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்

*******

என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்

*******

இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்

*******

அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன

*******

நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்

*******

துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு

*******

உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்

*******

உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதானப்படுத்திக்
கொள்வதற்காகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்

*******

ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்

*******

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

******

ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி

*******

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை